உலக தாய்ப்பால் வார விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில். உலக தாய்ப்பால் வாரவிழாவை முன்னிட்டு தாய்ப்பால் வாரவிழா, துவக்க விழா மற்றும் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. விழாவை கலெக்டர் ஆர்த்தி குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். இதில், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை விளக்கி பேசும்போது, பிறந்த குழந்தைகளுக்கு 6 மாத காலம் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தாய்மார்கள் புரதச்சத்து மிகுந்த காய்கறிகள், பருப்பு வகைகள், முளை கட்டிய பயிர்கள், மூக்கடலை ஆகிய எளிதில் கிடைக்கும் உணவு வகைகளை தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் துண்டுகளை தாய்மார்களுக்கு வழங்கினார். மேலும், அரசின் வழிகாட்டுதல்களை தவறாமல் கடைபிடித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோர் கலெக்டர் தலைமையில் தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து, அங்கன்வாடி பணியாளர்களின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில், சுகாதார பணிகள் துணை இயக்குநர்  பழனி, குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் சற்குணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: