நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்: உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 8

புதுடெல்லி: மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், 24 பல்கலைக்கழகங்கள் போலி பல்கலைக்கழகங்கள் என பல்கலைக்கழக மானிய ஆணையம் அறிவித்துள்ளது. இது தவிர லக்னோவில் உள்ள பாரதிய சிக்‌ஷா பரிசாத், டெல்லியில் இருக்கும் ஐஐபிஎம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும், பல்கலை மானிய ஆணையத்தின் 1956 சட்டவிதிகளை மீறி  செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 8 போலி பல்கலைக்கழகங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டெல்லியில் 7 போலி பல்கலைக்கழகங்களும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா இரண்டு போலி பல்கலைக்கழகங்கள், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரியில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றது. இந்த பல்கலைக்கழகங்கள்  மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாநில தலைமை செயலாளர்கள், கல்வித்துறை செயலாளர்கள் மற்றும் முதன்மை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதோடு,  எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறி உள்ளார்.

Related Stories: