×

ஆந்திராவில் சமூக வலைத்தளங்களில் காதல் வலைவீசி 300 பெண்களை சீரழித்தவன் கைது: நிர்வாண வீடியோ வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பு

திருமலை: ஆந்திராவில் சமூக வலைத்தளங்களில் காதல் வலைவீசி 300 இளம்பெண்களை சீரழித்த காமக்கொடூரன், நிர்வாண வீடியோ வெளியிடுவதாக மிரட்டி பணம், நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் புரோதட்டூர் சென்னுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னகுமார் என்கிற ராஜா(28). பொறியியல் படிப்பில் சேர்ந்த இவர் முதலாம் ஆண்டிலேயே கல்லூரி படிப்பை நிறுத்தி விட்டார். இதையடுத்து வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதில் கிடைக்கும் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று விடுதலை ஆனார். இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி திருட்டு வழக்கில் பிரசன்னகுமாரை போலீசார் கைது செய்தனர். அப்போது, அவரிடம் நடத்திய விசாரனையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கடப்பா மாவட்ட டிஎஸ்பி சுனில் கூறியதாவது: பிரசன்னகுமார் பேஸ்புக், ஷேர்சாட், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இளம்பெண்களிடம் நட்பை ஏற்படுத்தி பழகி வந்துள்ளான். பின்னர், காதல் வார்த்தைகளை நயமாக பேசி தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். நன்றாக பழக்கம் ஏற்பட்ட பிறகு அந்த பெண்களிடம் நிர்வாண, அரை நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் படி பிரசன்னகுமார் கேட்பானாம். அவனது, காதல் வலையில் வீழ்ந்த பெண்களும், காதலன் தானே என நினைத்து தங்களது நிர்வாண படங்களை அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து, பிரசன்னகுமார் இளம்பெண்கள் அனுப்பிய நிர்வாண படங்கள், வீடியோக்களை அவர்களிடமே காண்பித்து நகை, பணம் கேட்பானாம். அவ்வாறு தரவில்லை என்றால் நிர்வாண படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளான். இதனால், பயந்துப்போன பெண்கள் அவன் கேட்ட நகை, பணத்தை கொடுத்துள்ளனர். மேலும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் அளிக்காததால் இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளான்.

அதன்படி கடப்பா, விஜயவாடா, ஐதராபாத் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் மற்றும் திருமணம் ஆன நடுத்தர வயது பெண்கள், பிரசன்னகுமாரின் காதல் வலையில் சிக்கி சீரழிந்துள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார். மேலும் போலீசார் பிரசன்னகுமாரின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, போலீசாரே அதிர்ச்சி அடையும் வகையில் ஏராளமான இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிர்வாண படங்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும், பிரசன்னகுமாரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Andhra Pradesh , Andhra Pradesh man arrested for sexually abusing 300 women on social networking sites
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி