உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தற்காலிகமாக பணிபுரியும் மறைமலை அடிகள் பேரன் ப.சிவகுமார் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தற்காலிகமாக பணிபுரியும் மறைமலை அடிகள் பேரன் ப.சிவகுமார் பணியை நிரந்தரம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மறைமலை அடிகளார் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை சிறப்பித்து போற்றும் வகையில், கடந்த 1997ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் “நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலாவாக தமிழ்வானில் ஒளிவிட்டவரும், நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என சீறியெழுந்த செந்நாப்புலவருமான செந்தமிழ் வித்தகர் - இனமான ஏந்தல் தமிழறிஞர் மறைமலை அடிகளார் தமிழுக்கு அளித்துள்ள படைப்புகள் அனைத்தையும் அரசுடைமையாக்கவும், அவரது குடும்பத்தினருக்கு காப்பு நிதி வழங்கவும் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்’’ - என அறிவித்து, தமிழுக்கும், மறைமலை அடிகளாருக்கும் சிறப்பு செய்தது இத்தருணத்தில் நினைவு கூரத்தக்கது.

இத்தகைய சூழ்நிலையில், தமிழறிஞர் மறைமலை அடிகளாரின் இளைய புதல்வர் மறை பச்சையப்பன், தற்போது மிகவும் வறிய நிலையில் உள்ளதையும், அவர் குடியிருக்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வாடகை குடியிருப்பிற்கு பராமரிப்பு கட்டண நிலுவை தொகையை செலுத்த இயலாத நிலையில் உள்ளதையும் அறிந்த, முதல்வர் மு.க.ஸ்டாலின், மறை பச்சையப்பன் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு செலுத்த வேண்டிய பராமரிப்பு கட்டண நிலுவை தொகையை தள்ளுபடி செய்தும், வாழ்நாள் முழுவதும் பராமரிப்பு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்தும் உத்தரவிட்டுள்ளார்.

அதோடு, மறை பச்சையப்பன் மகன் ப.சிவகுமார் தற்போது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொகுப்பூதியத்தில் தற்காலிக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருவதை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பு நேர்வாக அவரது பணியினை நிரந்தரம் செய்திடவும் உத்தரவிட்டுள்ளார். தமிழறிஞர் மறைமலை அடிகளார் தமிழுக்கு அளித்துள்ள படைப்புகள் அனைத்தையும் அரசுடைமையாக்கவும், அவரது குடும்பத்தினருக்கு காப்பு நிதி வழங்கவும் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்’’ - என அறிவித்து, தமிழுக்கும், மறைமலை அடிகளாருக்கும் சிறப்பு செய்தது இத்தருணத்தில் நினைவு கூரத்தக்கது.

Related Stories: