தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று, வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் கூறியதாவது: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள்; புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.  5, 6ம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய ஒருசில உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

7ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், சோலையார், வால்பாறை, சின்கோனா ஆகிய இடங்களில் தலா 1 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.  இன்று முதல் வருகிற 7ம் தேதி வரை தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென் கிழக்கு இலங்கை பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: