பாலியல் தொல்லை தந்ததாக போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா ஜாமீன் கோரிய வழக்கு.: சிபிசிஐடி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா ஜாமீன் கோரிய வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள, சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா (79). இவர் தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீது 3 மாணவிகள் கொடுத்த புகார்களின் பேரில் தனித்தனியாக 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது நீதிமன்ற உத்தரவின் பெயரில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

போக்சோ சட்டத்தில் கைதான சிவசங்கர் பாபாவின் 2 ஜாமீன் மனுக்கள் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுக்களை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனையடுத்து இரு வழக்குகளிலும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் அவர் தெரிவித்து இருந்தது, கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளிக்கும் தனக்கும் தொடர்பில்லை. ஆன்மிகம், தமிழ் சார்ந்த சொற்பொழிவுக்கு மட்டுமே அந்த பள்ளிக்கு சென்றதாக சிவசங்கர் பாபா கூறியிருந்தார். மேலும் நீலாங்கரையில் 12 கிரவுண்ட் நிலத்தில் சம்ரக் ஷனா அறக்கட்டளையை மட்டுமே நடத்துவதாக சிவசங்கர் பாபா தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து இன்று சிவசங்கர் பாபா-வின் ஜாமீன் மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக 11-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Related Stories: