இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட மனைவி இறந்துவிட்டதாக பயந்து தூக்குப் போட்டு கணவன் தற்கொலை: கொரட்டூரில் பரபரப்பு சம்பவம்

ஆவடி: இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட மனைவி இறந்துவிட்டார் என்ற பயத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் அக்ரஹாரம் எல்லையம்மன் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் குமார் (40). இவர் பெயிண்டர்.  இவரின் மனைவி துர்கா (36). இவர்களுக்கு மோகன் (17), ஜீவா (15) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்றிரவு குமார் வேலையை முடித்து விட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்தபோது மீன் குழம்பு இருந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த குமார்,’’இன்று ஆடி கிருத்திகை ஏன் மீன் குழம்பு வைத்தாய்’ என்று கேட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடக்கும் என்பதால் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இரண்டு மகன்களும் அருகில் உள்ள பெரியம்மா வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

இதன்பிறகும் அவர்கள் இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த குமார், இரும்பு கம்பியை எடுத்து மனைவிதுர்காவை சரமாரி தாக்கியுள்ளார். ரத்தவெள்ளத்தில் துர்கா மயங்கிவிழுந்ததும் இறந்துவிட்டார் என்று நினைத்து குமார் அதிர்ச்சி அடைந்தார். போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் குமார், மின்விசிறி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதற்கிடையில், இரவு 10 மணி அளவில் வீடு திரும்பிய மகன்கள், தாய் மயங்கிக் கிடப்பதை பார்த்ததும் தந்தை இறந்துகிடப்பது கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கதறி அழும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால் பரபரப்பு காணப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொரட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். துர்காவை மீட்டு உடனடியாக ரெட்டேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்பிறகு குமார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றிய புகாரின்படி, கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றார்.

Related Stories: