சமூக வலைதளத்தில் காதல்வலை வீசி பெண்களின் நிர்வாண படங்களை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது: 300க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்த கொடூரம்

திருமலை: சமூக வலைதளத்தில் இளம்பெண்களுக்கு காதல் வலைவீசி அவர்களின் நிர்வாண படங்களை வாங்கி அதை வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன் கைது செய்யப்பட்டான். இவனிடம் 300க்கும் மேற்பட்ட பெண்கள் சீரழிந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புரோதட்டூர் சென்னுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்னகுமார் என்கிற ராஜாரெட்டி(28). பொறியியல் கல்லூரி படிப்பை முதல் ஆண்டிலேயே நிறுத்திவிட்டார். இதையடுத்து வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இதில் கிடைக்கும் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். 2017ம் ஆண்டு திருட்டு வழக்கில் சிறைக்கு சென்ற பிரசன்னகுமார், விடுதலை ஆனதும் மீண்டும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 29ம்தேதி திருட்டு வழக்கில் பிரசன்னகுமாரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரனையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பிரசன்னகுமார் பேஸ்புக், ஷேர்சாட், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளத்தின் மூலம் இளம்பெண்களிடம் நட்பை ஏற்படுத்தி பழகி வந்துள்ளான்.

பின்னர் காதல் வார்த்தைகளை நயமாக பேசி தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். நன்றாக பழக்கம் ஏற்பட்டபிறகு அந்த பெண்களிடம் நிர்வாண, அரை நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும்படி பிரசன்னகுமார் கேட்பானாம். அவனது காதல் வலையில் வீழ்ந்த பெண்களும், காதலன்தானே எனநினைத்து தங்களது நிர்வாண படங்களை அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து பிரசன்னகுமார் இளம்பெண்கள் அனுப்பிய நிர்வாண படங்கள், வீடியோக்களை அவர்களிடமே காண்பித்து நகை, பணம் கேட்பானாம்.

அவ்வாறு தரவில்லை என்றால் நிர்வாண படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளான். இதனால் பயந்து போன பெண்கள் அவன் கேட்கும் நகை, பணத்தை கொடுத்துள்ளனர். மேலும் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் அளிக்காததால் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளான்.

அதன்படி கடப்பா, விஜயவாடா, ஐதராபாத் உள்பட பல நகரங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் மற்றும் திருமணம் ஆன நடுத்தர வயது பெண்கள், பிரசன்னகுமாரின் காதல் வலையில் சிக்கி சீரழிந்துள்ளதாக தெரிகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பிரசன்னகுமாரின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது போலீசாரே அதிர்ச்சி அடையும் வகையில் ஏராளமான இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிர்வாண படங்கள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் பிரசன்னகுமாரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களின் போட்டோக்களையோ அல்லது குடும்பத்தில் உள்ளவர்கள் போட்டோக்களையோ பதிவிடக்கூடாது. அவ்வாறு பதிவிட்டால் இதுபோன்ற அவலங்களில் தள்ளப்படுவார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories: