சந்தேகப்பட்டு டார்ச்சர் செய்ததால் உணவில் விஷம் கலந்து கணவரை கொன்றேன்: 2வது மனைவி பரபரப்பு வாக்குமூலம்

வேலூர்: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா அகரம்புதுமனை கிராமத்தைச் சேர்ந்தவர் சூரிமுத்து(70), விவசாயி. இவரது 2வது மனைவி நிர்மலா(45). இவர்களுக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சூரிமுத்துவிற்கு அவரது மனைவி நிர்மலா நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து சூரிமுத்து, தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். நிலத்தில் இவரும் இவரது உறவினர் காந்தராஜ் மற்றும் ஒருவர் என 3 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, சூரிமுத்துவுக்கு நிர்மலா உணவு சமைத்து எடுத்து வந்து நிலத்தின் அருகே வயலில் வைத்துவிட்டு சென்றுள்ளார். பசியில் இருந்த சூரிமுத்து அந்த உணவை எடுத்து சாப்பிட்டுள்ளார். அதேபோல் அவரது உறவினரான காந்தராஜியும் சாப்பிட்டுள்ளார். பின்னர் இருவரும் மயங்கி விழுந்தனர். உடனே அவர்களை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூரிமுத்து நேற்று மாலை இறந்தார். காந்தராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து சண்டையிட்டு டார்ச்சர் செய்ததால் கணவனை உணவில் விஷம் கலந்து அவரது மனைவியே கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, நிர்மலா மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசில் நிர்மலா அளித்த வாக்குமூலம்: என் கணவர் சூரிமுத்து நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி என்னை டார்ச்சர் செய்தார்.

இதனால் பயிர்களுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பாட்டில் கலந்து வைத்து கொன்றேன். இவ்வாறு நிர்மலா தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட நிர்மலாவை போலீசார் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Related Stories: