'அதிமுக-வை முழுமனதோடு முறைப்படி அழைத்தும் பங்கேற்கவில்லை'!: கலைஞர் படத்திறப்பு விழா குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!!

சென்னை: கலைஞர் படத்திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என முழுமனதோடு முறைப்படி அழைப்பு விடுத்தும் அதிமுக பங்கேற்கவில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவும், கலைஞர் படத்திறப்பு விழாவும் ஆளுநர் தலைமையில் குடியரசு தலைவர் பங்கேற்புடன் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அனைத்து சட்டமன்ற கட்சிகளும் பங்கேற்ற நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக மட்டும் பங்கேற்கவில்லை. சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்ட போது திமுக பங்கேற்காததால் கலைஞர் படதிறப்பில் தாங்கள் பங்கேற்கவில்லை என அதிமுக தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், அதிமுகவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார். ஜெயலலிதா படத்திறப்பின் போது தங்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படவில்லை. வெறும் அழைப்பிதழ் மட்டுமே அனுப்பினர் என்றும் ஆனால் கலைஞர் படைதிறப்பிற்கு முழுமனதோடு முறைப்படி எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு அழைப்பு விடுத்ததாகவும், வாழ்த்துரை வழங்க கோரியதாகவும் துரைமுருகன் கூறினார். எனவே ஜெயலலிதா படதிறப்பில் திமுக பங்கேற்காததையும், கலைஞர் படதிறப்பில் அதிமுக பங்கேற்காததையும் ஒப்பிட முடியாது என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Related Stories: