தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு: இலங்கை படையினர் 7 பேர் மீது வழக்கு

வேதாரண்யம்: தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை சேர்ந்த 7 பேர்  மீது வேதாரண்யம் கடலோர காவல்படையினர் வழக்குப் பதிந்துள்ளனர். நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 28ம் தேதி அக்கரைப்பேட்டையை சேர்ந்த கவுதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கலைச்செல்வன், தீபன், ராஜ், ஜீவா, மாறன், அரசுமணி, முருகானந்தம் உள்ளிட்ட 10 பேர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று முன்தினம் மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 கடல் மைல் தொலைவில் மீனவர்கள், விசைப்படகில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள் மீது  துப்பாக்கியால் சுட்டனர். இதில் மீனவர் கலைச்செல்வன் மீது ஒரு துப்பாக்கி குண்டு உரசி சென்றது. இதில் மீனவர் கலைச்செல்வன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் மயங்கி விழுந்த மீனவரை நேற்று காலை நாகை துறைமுகத்துக்கு மீனவர்கள் கொண்டு வந்தனர். நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலைச்செல்வனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைதொடர்ந்து விசைப்படகில் சென்ற நாகையை சேர்ந்த முருகானந்தம் என்பவரிடம் வாக்குமூலம் பெற்று இலங்கை கடற்படையை சேர்ந்த 7 பேர் மீது இந்திய ஆயுத சட்டம், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து வேதாரண்யம் கடலோர காவல்படையினர் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: