கான்பூர்: உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் மழை நீடிப்பதால் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து பெய்யும் மழையால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாரான் மாவட்டம், சிப்பாபராட் முழுவதும் சூழ்ந்த வெள்ளப்பெருக்கால் அங்குள்ள காவல் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. காவல் நிலையத்தில் 3 அடி உயரத்திற்கு கணினி அறை, பதிவு அறை, விசாரணை கைதிகளை அடைக்கும் அறை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானின் பல இடங்களில் நாளை வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.