சென்னை போலீசில் மீண்டும் உருவாகிறது கோவிட் சிறப்பு விசாரணை குழு: கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையில் சிறப்பு ஏற்பாடு

சென்னை: சென்னை போலீசில், கோவிட் சிறப்பு விசாரணை குழு ஆலோசனை கூட்டம் நேற்று கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. 2வது அலையில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் 7 ஆயிரத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டது. அதைப்போன்று, சென்னையில் கொரானா 2வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் 13 காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 போலீசார் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

அந்த குழுவினர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண்களை பெற்று பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு தொற்று எப்படி பரவியது, நீங்கள் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தீர்கள், சிகிச்சை எடுத்து வருகிறார்களா? உங்கள் குடும்பத்தில் வேறு யாருக்காவது கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்று முழு விவரங்களை குறித்து ெகாள்வார்கள். அதன்பிறகு கொரானா பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களுக்கு எப்படி கொரோனா பரவியது, நீங்கள் யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தீர்கள், ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்தீர்களா? கொரோனா பாதிப்பு உள்ளதா? சிகிச்சை பெற்றீர்களா? என்று விசாரித்து கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைப்போன்று சென்னை, கோவை, சேலம் உட்பட 23 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை, மாநகராட்சி சார்பில் மூன்றாவது அலை பரவாமல் தடுக்கும் வகையில் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதைப்போன்று சென்னை காவல்துறை சார்பில் கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையில் 13 காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 பேர் கொண்ட கோவிட் விசாரணை குழு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் குழுவில் பானுப்பிரியா, அன்புக்கரசி, சுப்பையா தாஸ், விக்னேஷ், ரேவதி, ஓவியா, ராதா, மகேஷ்வரி, சாராள், சித்ரா, கோமதி, சாந்தி, குணசுந்திரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்த குழுவினருடான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

அப்போது கொரோனாவை கட்டுப்படுத்த எப்படி செயல்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் கடந்த முறை சிறப்பாக செயல்பட்டது போல் இந்த முறையும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூடுதல் கமிஷனர் கண்ணன் ஆலோசனை வழங்கினார்.

Related Stories: