காபூல்: கந்தகார் விமான நிலையத்தின் மீது ஏவுகணைகளை வீசி தலிபான்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு தலிபான்கள் அரசு படையுடன் சண்டையிட்டு ஒவ்வொரு பகுதிகளாக பிடித்து வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் 2வது பெரிய நகரமான கந்தகாரை தலிபான்கள் தற்போது குறிவைத்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு கந்தகார் விமான நிலையத்தின் மீது அவர்கள் 3 ஏவுகணைகள் வீசி தாக்கினர். இதில், 2 ஏவுகணைகள் விமான நிலைய ஓடு பாதையில் விழுந்து வெடித்தன. இதனால், ஓடு பாதை சேதமடைந்ததைத் தொடர்ந்து நேற்று விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.