அரசு பணியில் சுணக்கம் காட்டியதாக தமிழகத்தில் 112 நகராட்சி அதிகாரிகள் டிரான்ஸ்பர்: அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு

சென்னை: தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு நகராட்சிகளில், தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பொறியாளர் பிரிவு, நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் மீது, சரியாக பணிகளை செய்வது இல்லை, பல முறைகேடுகளில் ஈடுபடுதல், பணியில் சுணக்கம், மெத்தனமாக செயல்படுவது என பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தது. எனவே, இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை உடனடியாக மெத்தன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி துறை செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மூன்றாம் நிலை பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், நகரமைப்பு ஆய்வாளர்கள் என 112 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், குறிப்பாக சென்னையை சுற்றி உள்ள தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம் உட்பட சென்னையில் பணியாற்றிய பலரை தென் மாவட்டங்களுக்கு அதிரடியாக பணியிடமாற்றம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். இதில், தாம்பரம் நகராட்சி நகரமைப்பு அலுவலராக இருந்த சிவக்குமார் கரூர் நகராட்சிக்கும், கரூர் நகராட்சி நகரமைப்பு அலுவலராக இருந்த அன்பு தாம்பரம் நகராட்சிக்கும், கும்பகோணம் நகராட்சி நகரமைப்பு அலுவலராக இருந்த பாஸ்கரன் பல்லாவரம் நகராட்சிக்கு நகரமைப்பு அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: