கலைஞரும் சட்டமன்றமும்

இந்திய அரசுச்சட்டம் 1919 இயற்றப்பட்ட பின், சென்னை மாகாணத்தில் 1921ல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. இதன் முதல் கூட்டம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1921ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுதந்திரத்திற்கு பிறகு 1952 ஜனவரியில் நடைபெற்ற பொதுத்தேர்தலை அடுத்த தமிழ்நாடு மாநிலத்தின் முதல் சட்டப்பேரவை 1952 மார்ச் 1ம் தேதி அமைக்கப்பட்டது. 1967-71ல் நான்காம் சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் சென்னை மாநிலத்தை  ”தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் பரிந்துரைக்கப்பட்டது. அப்போது தான் சென்னை சட்டசபை எனும் பெயர் தமிழ்நாடு சட்டப்பேரவை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதேபோல், சட்டப்பேரவை-கலைஞர் இரண்டையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது.

1957ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் குளித்தலையில் போட்டியிட்டு கலைஞர் கருணாநிதி வெற்றி பெற்றார். அப்போது கலைஞருக்கு 33 வயது. கலைஞர் மறையும் போது அவருக்கு 95 வயது. அப்போது அவர் திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் கலைஞர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். தோல்வியே சந்திக்காத ஒரு பேரவை உறுப்பினர் என்றால் அது கலைஞர் மட்டுமே. தமிழ் ஒன்றே மூச்சு என வாழ்ந்தவர்  கலைஞர். தமிழ் என்றால் கலைஞர் மட்டுமே நினைவுக்கு வரும் வகையில் தமிழுக்காக  கலைஞர் ஆற்றிய அர்ப்பணிப்பு சொல்லி மாலாது. தமிழகத்தில் முதல்வராக 19  ஆண்டுகாலம் இருந்துள்ளார். 5 முறை முதல்வர் 13 முறை சட்டமன்ற உறுப்பினராக  இருந்தவர் கலைஞர்.

தமிழகத்தின் நீண்ட கால முதல்வர் என்ற பெருமைக்கு  சொந்தக்காரர் கலைஞர். வெற்றியும், தோல்வியும் பெரிய வித்தியாசத்தோடு  பார்க்காத பண்பாளர் என்றால் அது மிகையல்ல. சாதிகளால் பிரிந்திருந்த தமிழனை  சமத்துவபுரத்தில் சமமாக ஆக்கியவர்.  கலைஞரும்-நகைச்சுவையும்: கலைஞரின் நகைச்சுவை உணர்வை எதிர்கட்சி உறுப்பினர்கள் கூட ரசித்தது உண்டு. ஒருமுறை சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, எதிர்கட்சி உறுப்பினர், ‘கும்பகோணம் கோயில் குளத்தில் முதலை உள்ளதாக” கூறப்படுகின்றது. அவ்வாறு ஏன் செய்தீர்கள்? அதை எப்படி ஏற்றுக்கொள்வது? என்று கேள்விகளை முன்வைத்தார்.

இதற்கு உடனடியாக கலைஞர் எழுந்து நின்று, மாண்புமிகு உறுப்பினர் முதலையை ஏன் போட்டீர்கள் என்று கேட்கின்றார். அவருக்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அரசாங்கம் முதலைத் தான் போடமுடியுமே தவிர முதலையை போட முடியாது என்று கூறினார். கலைஞரின் பதிலை கேட்டு அவையில் அனைவரும் சிரித்துவிட்டனர்.

தமிழ் மொழி கட்டாய பாடமாக்கப்பட்டது

தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காமலேயே ஒருவன் பட்டம் பெற்றுச் செல்லக்கூடிய அவலநிலை நீடிப்பதாகக் கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டு, திமுக ஆட்சிக் காலத்தில் நீக்கப்பட்டது. கலைஞர் ஐந்தாம் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் நடைபெற்ற முதலாவது சட்டப் பேரவை கூட்டத்திலேயே இதற்கான சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். 2006ம் ஆண்டு மே மாதம் 31ம் நாள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், அனைத்துப் பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புவரை தமிழை ஒரு பாடமாகக் கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டது.   

 அனைத்துக் கல்லூரிகளும் விருப்பம் சார்ந்த தகுதிப் புள்ளி முறை 2009ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, பட்டப்படிப்பில் தமிழை முதல் பிரிவில் எடுத்துப் படிக்காத மாணவர்கள் நான்காம் பிரிவில் தமிழ் மொழியை ஒரு பாடமாகக் கட்டாயம் படிக்க வேண்டும். கலைஞரின் இந்த முயற்சியால், இன்று தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள் அனைத்திலும் பிற மாநில மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் தமிழை ஒரு பாடமாகப் படித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: