சென்னை: கொரோனா தொற்று எதிரொலி காரணமாக சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைக்கு செல்ல போலீசார் அனுமதிக்கமாட்டார்கள் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறினார். தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசு முழுவீச்சில் கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் ஒன்பது இடங்கள் செயல்பட மாநகராட்சி தடை விதித்தது. அதன்படி நேற்று முதல் வருகிற 9 ஆம் தேதி வரை ரங்கநாதன் தெரு சந்திப்பு முதல் வடக்கு உஸ்மான் சாலை , மாம்பலம் ரயில் நிலையம் சந்திப்பு வரை இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் தடுப்புகள் அமைக்கப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கடற்கரைக்கு செல்ல அனுமதியில்லை என தகவல் தெரிவித்தார். அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வௌியே வர வேண்டும். திருமணங்களில் சாப்பிடும் போதும் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். விசேஷ நாட்களில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே வழிபாடு நடத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.