வயதான தம்பதி கொலை வழக்கில் 2 பேர் கைது நகை, பணத்திற்காக கொன்றது அம்பலம்: 27 சவரன் பறிமுதல்

சென்னை: வண்டலூர் அருகே கொளப்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சாம்சன் தினகரன் (65). அவரது மனைவி ஜெனட் (52). கடந்த 16ம் தேதி இரவு, இருவரும் கை, கால்கள் கட்டப்பட்டு கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். குற்றவாளிகளைப் பிடிக்க எஸ்பி விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சந்தேகத்தின் பேரில் பெருங்களத்தூரை சேர்ந்த சுந்தர் (32), கொளப்பாக்கத்தை பிரேம் (18) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், தம்பதியை கொலை செய்தது இவர்கள்தான் என தெரிந்தது.  இதையடுத்து போலீசார், நேற்று முன்தினம் 2 பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: வயதான தம்பதி தனியாக வசிப்பதை அறிந்த 2 பேரும், அவர்களிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். சம்பவத்தன்று, அந்த வீட்டிற்கு சென்று, தம்பதியை கழுத்தில் கத்தியை வைத்து நகை மற்றும் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்து டேபிளில் வைத்துவிட்டு, அனைத்தையும் எடுத்து செல்லுங்கள். எங்களை மட்டும் உயிரோடு விட்டால் போதும் என அவர்கள் கதறி அழுதுள்ளனர். பின்னர் கணவன் மனைவி இருவரும் தனி அறையில் சென்று ஜெபம் செய்துள்ளனர்.

ஆனால், போலீசில் புகார் அளித்துவிட்டால், மாட்டிக்கொள்வோம், என்ற பயத்தில் கயிற்றால் அவர்களது கழுத்தை இறுக்கி, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். தொடர்ந்து வீட்டின் தண்ணீர் தொட்டியில் சடலத்தை வீசிவிட்டு நகை மற்றும் பணத்துடன் தப்பியுள்ளனர். பின்னர், கொள்ளையடித்த நகைகளை கோவளம் கடற்கரையில் புதைத்தனர். பின்னர் பிரேமுக்கு தெரியாமல் சுந்தர் மட்டும் மறுநாள் சென்று அந்த நகையை எடுத்துச் சென்று அவரது வீட்டுக்கு பின் பக்கத்தில் உள்ள மண்ணில் புதைத்து வைத்தார்.

போலீசில் சிக்கியதும், அவர்களை கோவளம் கடற்கரையில் பள்ளம் தோண்டி தேடி பார்த்தனர். ஆனால், அங்கு நகை இல்லை. அதன்பின்னர், சுந்தரை  போலீசார் தேடி சென்றனர் அப்போது காரணைப்புதுச்சேரி ஊராட்சி காட்டூரில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சுந்தரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் 27 சவரன் நகைகளை அடகு வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து நகைக்கடைக்கு சென்று போலீசார் 27 சவரன் மீட்டனர் என விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, 2 பேரையும் நேற்று இரவு செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: