12ம் வகுப்பு துணை தேர்வுகளை தனி தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு துணை தேர்வுகளை தனி தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நமது மாநிலத்தில் 2021ம் ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் விலக்களித்ததை போல 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 12ம் வகுப்பு துணை தேர்வுகளை தனி தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் 2016ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்பிரிவின் அடிப்படையில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள் பள்ளி கல்வித் துறையால் வெளியிடப்படும். மேலும் மேற்படி தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாங்கள் விரும்பும்பட்சத்தில் இந்த தேர்வினை எழுதலாம். தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்கள் பின்னாளில் இந்த உத்தரவின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாக தங்களை அறிவிக்குமாறு கோரலாகாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: