கொரோனா 3ம் அலையை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கம்

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை வராமல் தடுக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். கொரோனா மூன்றாம் அலை வராமல் தடுக்க, தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மாநிலம் முழுவதும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை மீண்டும் உயராமல் இருக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. அதன் தொடக்கமாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார துவக்க விழாவை கலைவாணர் அரங்கில் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்பு பணி அலுவலர் செந்தில் குமார், தேசிய நல வாழ்வு குழும இயக்குநர் தாரேஷ் அகமது மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கான கொரோனா சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு கண்காட்சியை துவக்கி வைத்து, மூன்றாம் அலையை தடுப்பதற்கு உறுதிமொழியும், விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவிக்கப்பட்ட #MASKUpTN என்ற ஹேஷ்டேக்கை இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில் SHARECHAT செயலியினையும் கொரோனா பேட்ஜினையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன்பின்பு கொரோனா விழிப்புணர்வு காணொலியினை வெளியிட்டு, எல்.இ.டி பொருந்திய வாகனங்களின் மூலம் கொரோனாவிற்கு எதிரான தீவிர பிரசாரத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒருவார காலம், தினந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு துறைகள் மூலம் நடத்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, துண்டு பிரசாரங்கள், சிற்றேடுகள், டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சி நேர்காணலிலும் விழிப்புணர்வு, கடை வீதிகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் வரும் மக்களிடையே முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் விழிப்புணர்வு, வியாபாரிகள் நலச்சங்கங்களுக்கு கொரோனா விழிப்புணர்வு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் மூலம் விழிப்புணர்வு முகாம்கள், மாணவர்களுக்கிடையே குறும்பட போட்டிகள், ஓவியப்போட்டிகள், கொரோனா விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்குதல், எப்.எம் ரேடியோ மூலம் கேள்வி பதில் நிகழ்ச்சிகள், மீம்ஸ் உருவாக்குதல் போன்றவற்றை நடத்தவும், கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு, நோய் எதிர்ப்பு தன்மை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் கிராம அளவில், வார்டு அளவில், மண்டல அளவில் 100% கொரோனா தடுப்பூசியை செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை அந்தந்த மாவட்டங்களில் கவுரவித்து பரிசுகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், அறிகுறிகள் தென்பட்டவுடன், உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறவும், மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

Related Stories: