திண்டுக்கல்: கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலையீட்டால் திண்டுக்கல் ஆவின் நிறுவனத்திற்கு ரூ.4.32 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திண்டுக்கல்லிற்கு நேற்று வந்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொருளாளர் சங்கர் அளித்த பேட்டி: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் ஒன்றியத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள 7 வழித்தடங்களில் பால் விற்பனை செய்ய 7 முகவர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அப்போதைய அதிமுக அரசின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலையீட்டின் காரணமாக, கடந்த 13.2.2020 முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி 7 முகவர்களும் நிறுத்தப்பட்டு, ஒரு முகவருக்கு மட்டுமே 7 வழித்தடங்களிலும் பால் விநியோகம் செய்ய உரிமை வழங்கப்பட்டது. ஒரு நாளைக்கு 22 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.