மழைக்கால தொடரில் முதல் 2 வாரம் நாடாளுமன்றம் முடங்கியதால் ரூ.133 கோடி வரிப்பணம் வீண்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இதில், பெகாசஸ் செல்போன் ஒட்டுகேட்பு, வேளாண் சட்டங்கள் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி செய்வதால், நாடாளுமன்றம் முழுமையாக முடங்கியது. இதன் காரணமாக மக்கள் வரிப்பணம் ரூ.133 கோடி வரை வீணாகி இருப்பதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவை நிர்ணயிக்கப்பட்ட 54 மணி நேரத்தில் வெறும் 7 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது. மாநிலங்களவை நிர்ணயிக்கப்பட்ட 53 மணி நேரத்தில் 11 மணி நேரமே செயல்பட்டுள்ளது. இரு அவைகளும் சேர்த்து மொத்தம் 107 மணி நேரத்தில் 18 மணி நேரங்கள் மட்டுமே அலுவல்கள் நடந்துள்ளன. இது வெறும் 16.8 சதவீதம் மட்டுமே. 89 மணி நேரம் வீணாகி உள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒரு நிமிடத்திற்கு ரூ.2.5 லட்சம் செலவிடப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. அந்த வகையில், நடப்பு கூட்டத் தொடரில் முதல் 2 வாரத்தில் ரூ.133 கோடி மக்கள் வரிப்பணம் வீணாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: