பருவநிலை மாற்றத்தை அலட்சியப்படுத்தினால் பேரழிவு: 14 ஆயிரம் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

துபாய்: பருவ‌நிலை மாற்றத்தை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தினால் பெரும் துயரங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று 153 நாடுகளை சேர்ந்த 14,000 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஒரேகான்  பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான இந்த ஆய்வறிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போதைய கால கட்டத்தில் கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகி வருவதையும் செயற்கைக்கோள் தரவுகள் தெரிவிக்கிறது.

சமீபத்திய ஆய்வில் கிழக்கு அண்டார்டிகாவிலும் பனிப்பாறை உருகி வருவதாக தெரிகிறது. இதனால்,  கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக‌ பூமியின் வெப்பநிலை முன்பு எப்போதும் இல்லாத வகையில் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உலகளாவிய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெருக்கத்தால் கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்து, அதன் காரணமாக புவியின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளது. பருவ நிலை மாற்றம் மனித இனத்துக்கு மட்டுமில்லாமல் விலங்குகள், தாவரங்களையும் கடுமையாக பாதித்து வருகிறது. அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்ட தீ, விலங்குகள் மற்றும் பறவைகள் இடம் பெயர்தல் மற்றும் சமீபத்தில் துருக்கியில் ஆயிரக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் உயிரிழப்பு, ஜெர்மனி மற்றும் சீனாவில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களை சுட்டி காட்டுகின்றனர்.

தொழில் புரட்சி தொடங்கிய காலத்தில் இருந்து, தற்போது வரை 30 சதவீதத்துக்கும் அதிகமாக கரியமில வாயுவின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது கரியமில வாயுக்களின் செறிவு வளிமண்டலத்தில் அதிகரித்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் மோசமாக பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இந்தியா 14ம் இடத்தில் உள்ளது. இவற்றை தடுக்க சர்வதேச அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவது நிலக்கரி, எரிவாயு, கச்சா எண்ணெய்  உள்ளிட்ட பயன்பாட்டை குறைத்து பூமியை பாதுகாப்பது  உயிரினங்கள், காடுகள் மற்றும் ஈரநிலங்கள் போன்ற முக்கியமானவற்றை பாதுகாத்து மீட்க வேண்டும் இவற்றை அவசியம் சர்வதேச நாடுகள் செய்யவேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: