சி.பி.எஸ்.இ. போல் தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்றும் பாடத்திட்டங்களை குறைக்காமல் பொதுத்தேர்வுகளை அறிவிக்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: சி.பி.எஸ்.இ. போல் தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். எவ்வளவு சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும் என்பது அதுபற்றிய ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். நடப்பு கல்வியாண்டிலும் நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத சூழல் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டில் பின்பற்றப்பட்ட பாடத்திட்டங்கள் குறைப்பு (30 சதவீதம்) முறையையே நடப்பு கல்வியாண்டிலும் (2021-22) தொடருவதற்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வியாண்டு இரண்டாக பிரிக்கப்பட்டு, 2 பொதுத்தேர்வுகள் நடத்துவதற்கு சி.பி.எஸ்.இ. திட்டமிட்டுள்ளது.

இந்த தேர்வுகள், குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே நடத்தப்பட இருக்கின்றன.  குறைக்கப்பட்ட பாடங்களின் அடிப்படையிலேயே உள்மதிப்பீடு, பயிற்சி, திட்டங்களை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று கடந்த ஆண்டில் அதிகமாக இருந்ததால், கடந்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் வழியாகவே நடத்தப்பட்டன. மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் முழு பாடங்களையும் கற்றுக்கொள்ள முடியாது என்பதை கருத்தில் கொண்டும், அவர்களின் சுமையை குறைக்கும் வகையிலும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் அனைத்து பாடங்களிலும் 30 சதவீத பாடத்திட்டத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.

Related Stories: