×

தாய்மையை தள்ளிப் போடாதீர்கள்!

நன்றி குங்குமம் தோழி

படிப்பு, வேலை, பதவி உயர்வு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்கின்ற பல்வேறு காரணங்களால் இன்றைக்கு குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடுகின்றனர். பின்னர், குழந்தையின்மையால் தவித்து வருகின்றனர். உலகத்திலேயே மிக உயர்ந்த உன்னதமான பதவி தாய்மை. பெருமைக்குரிய இந்தப் பதவிக்கு எல்லாப் பெண்களும் தகுதிஉடையவர்களே. அதற்கு முன் தேவை கொஞ்சம் ஆலோசனைகள்…

கொஞ்சம் முன்னெச்சரிக்கைகள்… இவை இரண்டும் இருந்தால், தாய்மைப் பதவிக்காக எந்த பெண்ணும் தவிக்க வேண்டியிருக்காது.. குழந்தை வேண்டும் என விரும்புகிற பெண்கள் திருமணத்திற்கு முன்பிலிருந்தே கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களைப் பற்றி பேசுகிறார் குழந்தையின்மை  சிகிச்சைக்கான சிறப்பு  மருத்துவர் எம்.எச். அபிநயா பாஸ்கரன்.

‘‘திருமணத்துக்கு பின் குழந்தைப் பேறு என்பது திருமணத்துக்கு பிறகு திட்டமிட வேண்டிய விஷயமில்லை. திருமணத்துக்கு முன்பிலிருந்தே அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாக வேண்டும்.

குழந்தையின்மைக்கு தற்போதைய வாழ்க்கைமுறை (Lifestyle) இளம் வயதிலேயே தொடர் குடிப்பழக்கத்தால் உடம்பு பெருத்து, கண்களுக்கு அடியில் சதை, தொப்பை தொங்குகிறது. மட்டுமல்லாது புகைப் பழக்கத்தால் இதயத்தைக் கெடுத்துவிடுகிறார்கள். இதையும்விட கட்டுப்பாடு இல்லாத உணவு பழக்கம். நேரம் கெட்ட வேளையில் உணவு உண்ணும் பழக்கம். இப்படி தன் வாழ்க்கையை தானே மண்ணை தோண்டி புதைத்துக்கொள்கிறார்கள்.

நேரத்திற்கு சாப்பிடுவதில்லை, இரவில் தூங்குவதில்லை, சத்தான உணவாக சாப்பிடுவதில்லை, கிடைப்பதைச் சாப்பிட்டு
விட்டுப் போகிறார்கள். முக்கியமாக உடற்பயிற்சி என்பது நிறைய பேரிடம் சுத்தமாக இல்லை. இன்றைக்கு பெரும்பாலான பெண்களும், ஆண்களும் இங்கிருந்து வெளிநாட்டு கம்பெனிகளுக்காக இரவு நேரங்களில் வேலை செய்கிறார்கள்.

இவர்கள் இரவு நேரத்தில் வேலை செய்துவிட்டு பகலில் தூங்கும்போது ஹார்மோன் இன்பேலன்ஸ் நிறைய ஏற்படுகிறது. ஆண்கள் லேப்டாப் யூஸ் பண்ணும்போது அதன் சூடுதாங்காமல் விந்தணுக்கள் குறைபாடு ஏற்படுகிறது. செல்போன் அதிகம் யூஸ் பண்ணுவதால் ரேடியேஷனாலும் கருமுட்டை உருவாகுதலில் குறைபாடு, ஆண்களுக்கு விந்தணுக்குறைபாடு ஏற்படுகிறது. இதெல்லாம்தான் இன்றைய இளம்தம்பதிகளுக்கு குழந்தையின்மைக்கு காரணம். அடுத்து, பொழுதுபோக்கு அதிகமாகிவிட்டது, தாம்பத்திய உறவு குறைந்துவிட்டது, அதனால்கூட குழந்தை பிறப்பு
தள்ளிப் போகிறது.

இந்தக் காரணங்கள் இல்லாமல், புராஜெக்ட் வொர்க், வெளிநாடு செல்ல வேண்டும், கூடுதலாக படிக்க வேண்டும் என்பது போன்ற ஒருசில காரணங்களை வைத்து 28 மற்றும் 30 வயதில் குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம் என தேவையில்லாமல் அவர்களாகவே குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்
போடுகிறார்கள். இன்றைய பனிச்சூழலில் உள்ள தவறான முறையே அவர்களின் வாழ்வை தலைகீழாக புரட்டிப்போட்டு விடுகிறது.
 
இவற்றை சரி செய்ய வேண்டு மென்றால், உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். திருமணமாகி முதல் குழந்தைப் பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போடக்கூடாது. இரண்டாவது குழந்தையை வேண்டுமானால் கொஞ்சநாட்கள் கழித்து பெற்றுக்கொள்ளலாம். திருமணமாகி ஒரு ஆண்டு, ஒன்றரை ஆண்டுகளில் கர்ப்பம் தரிக்க முடியவில்லை என்றால் உடனடியாக மருத்துவரைச் சென்று கலந்தாலோசித்து அவர்
களின் அறிவுரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மருத்துவரைப் பார்க்கச் செல்வதற்கு முன்பு உணவுக்கட்டுப்பாடு, மூன்று வேளை சாப்பிடும் சரிவிகித உணவுமுறை, தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, 8 மணி நேரம் தூங்குவது, 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது உள்ளிட்டவைகளைக் கடைப்பிடித்துப் பார்க்க வேண்டும். இவற்றோடு மருந்து மாத்திரைகளை உட்கொள்ளாமல் இயற்கையான முறையில் தாம்பத்திய உறவை நடைமுறைப்படுத்திப் பார்க்க வேண்டும். இவற்றிலெல்லாம் சரிவராமல் கருத்தரிப்பது தள்ளிப்போகிறது என்றால் மருத்துவரைப் பார்ப்பது சிறந்தது.

முன்கூட்டியே காரணங்களைத் தெரிந்துகொண்டால் உடனடியாக சரிசெய்துவிடலாம். அதைவிட்டுவிட்டு நான்கைந்து ஆண்டுகள் கழித்து சிகிச்சைக்குச் சென்றால் அதை சரிசெய்வதில் சிரமம் ஏற்பட்டுவிடும். பெண்கள் முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், முதல் குழந்தை 30 வயதுக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஆண்கள் 35 வயதுக்குள் குழந்தைக்கு தந்தையாகி விடவேண்டும். இவை மிக முக்கியமானவை ஆகும். மற்றபடி எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம், வேலைக்குப் போகலாம், சம்பாதிக்கலாம். ஆனால் குழந்தைப் பிறப்பு என்பது குறிப்பிட்ட வயதில் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தைகளை ஆரோக்கியமானவர்களாக வளர்த்தெடுக்க முடியும்’’ என்றார் மருத்துவர் அபிநயா.

தயாளன்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!