கத்திமுனையில் கார் கடத்திய 3 பேர் கைது

செங்கல்பட்டு ஜூலை 31: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (40). சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டுகிறார். நேற்று முன்தினம் இரவு கோவிந்தராஜன், கூடுவாஞ்சேரி அருகே ஓட்டலில் காரை நிறுத்தினார். அப்போது அவரை, செல்போனில் தொடர்பு கொண்ட நபர்  செங்கல்பட்டு செல்லவேண்டும். தன்னை மறைமலைநகரில் பிக்கப் செய்யும்படி கூறியுள்ளார். அதன்படி அவர், மறைமலைநகர் சென்றார். அங்கு 3 பேர் காரில் ஏறினர்.  சிங்கபெருமாள்கோயில் அடுத்த  மல்ரோசாபுரம் அருகே கார் சென்றபோது, 3 பேரும், கோவிந்தராஜனின் கழுத்தில் கத்தியை வைத்து, காரை  நிறுத்தினர்.

அவர் காரை நிறுத்தியதும், அவரிடம் இருந்த பணத்தை பறித்து கொண்டு, கண்களில்  மிளகாய் பொடியை தூவி, கீழே தள்ளிவிட்டு காரை கடத்தி சென்றனர். இதையடுத்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டனர். புகாரின்படி மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிங்கபெருமாள்கோயில் அருகே ஒரகடம் சாலையில் நேற்று மாலை காருடன் 3 பேரை கைது செய்தனர். விசாரணையில், கூடுவாஞ்சேரி அமுதம் காலனியை சேர்ந்த அசோக்  (21), ராம் நகர் வசந்த் (18),  மகாலட்சுமி நகர் சேர்ந்த விக்னேஷ் (19) என்றும், ஆடம்பர வாழ்க்கைக்காக காரை கடத்தியது தெரிந்தது.

Related Stories: