திருமலை: ஆந்திராவில் இறால் பண்ணையில் சட்ட விேராதமாக ரசாயனம் பயன்படுத்துவது தெரிந்ததால் 6 தொழிலாளர்கள் எரித்து கொலை செய்யப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், ரேப்பள்ளி மண்டலம், லங்கேவானி மேட்டில் இறால் பண்ணை உள்ளது. இங்கு பாதுகாப்பு பணியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ராமமூர்த்தி, கிரண், மனோஜ், பாண்டுபோ, மகேந்திரா மற்றும் நவீன் ஈடுபட்டு வந்தனர். நேற்று அதிகாலை 6 பேரும் மின்சாரம் தாக்கி உடல் கருகி உயிரிழந்திருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கூலித்தொழிலாளர்கள் தங்கியிருந்த இடத்தில் சோதனையிட்டனர். அப்போது, அங்கு ரசாயனங்கள் இருப்பு வைத்திருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இறால் பண்ணையில் ரசாயனங்கள் பயன்படுத்துவது சட்ட விரோதமானது. எனவே, இறால் பண்ணையில் சட்ட விரோதமாக ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது தெரிந்ததால் கூலி தொழிலாளர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனரா? அல்லது உண்மையிலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தனரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் கருகிய நிலையில் 6 தொழிலாளர்கள் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.