சேலம் மகுடஞ்சாவடி அருகே கார் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சேலம்: சேலம் மகுடஞ்சாவடி அருகே கார் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜூலை 25ல் அஜித்குமார் மற்றும் அருண் ஆகியோர் சென்ற பைக் மீது மின்னல் வேகத்தில் சென்ற கார் மோதியது. கார் மோதியதில் சாலைத்தடுப்பில் தூக்கி வீசப்பட்டதில் அஜித்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய சதீஷ்குமார் உள்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டத்திற்க்கு உட்பட்ட மகுடஞ்சாவடி காவல் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் கவுண்டம்பாளையம் அருகில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த அருண் மற்றும் அஜித்குமார் ஆகியோர் மீது அதே திசையில் வேகமாக வந்த கார் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. மனதை பத பதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகார் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் உடனடியாக வீடியோவை வைத்து காரின் உரிமையாளர் மற்றும் முகவரியை தனிப்படை அமைத்து குற்றவாளிகளை அதிரடியாக கண்டுபிடித்தனர். காரை வேகமாக ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் வினோத், கௌதம் ராஜ் மற்றும் அருண்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இவர்கள் நான்கு பேரும் குடிப்பழக்கத்தை மறக்க சங்ககிரி அருகே உள்ள பூமணி கோவிலுக்கு சென்று பூஜை செய்து கயிறு கட்டிக்கொண்டு குடிபோதையில் அதிவேகமாகவும் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது விசாரணை தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கார் மோதியதில் சாலைத்தடுப்பில் தூக்கி வீசப்பட்டதில் அஜித்குமார் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: