ஊரடங்கு, வேலையிழப்பால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் 75% கட்டணம் செலுத்தலாம் : ஐகோர்ட் அறிவுரை!!

சென்னை : நடப்பு கல்வியாண்டில் 85% கட்டணத்தை வசூலித்துக்கொள்ள தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் 75 சதவீத கட்டணத்தை முறையே 40, 35 சதவீதம் என்று இரு தவணைகளாக வசூலித்துக் கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டது. இந்த வழக்குகள், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வக்கீல், பள்ளிகள் 85 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். கட்டண சலுகை கோரும் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடப்பு (2021-22) கல்வியாண்டிலும் 2019-20ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதியளித்து ஜூலை 5ம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழகத்துக்கு பொருந்தாது. தமிழகத்தை பொறுத்தவரை கட்டண நிர்ணயக் குழு அளித்த பரிந்துரைகளையே அரசு பரிசீலிக்கும் என்று உறுதியளித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

85% கட்டணத்திற்கு அனுமதி!!

அவர் பிறப்பித்த உத்தரவில், நடப்பு கல்வி ஆண்டில் 85% கட்டணம் வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குகிறோம்.ஊரடங்கு, வேலை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 75% கட்டணம் செலுத்தலாம்.கல்வி கட்டணத்தை 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும்.கடைசி தவணையை 2022ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தாத காரணத்தால் மாணவர்களை வகுப்பில் சேர்க்காமல் இருக்க கூடாது. புகார் வந்தால் தீவிரமாக ஆராய்ந்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் தொடர முடியாத மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: