நாமக்கல் : நாமக்கல் அருகே மரவள்ளி கிழங்கு பயிரில் புதிய வைரஸ் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளிகிழங்கு அதிக அளவில் விவசாயிகள் பயிரிடுகிறார்கள். 7 மாத பயிரான மரவள்ளிகிழங்கை, மாவட்டத்தில் 100கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த ஆண்டு புதிதாக கள்ளிபூச்சி, செம்பேன் போன்ற வைரஸ்கள் மரவள்ளிகிழங்கு பயிரில் தோற்றி பயிரை முற்றிலுமாக பாதித்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல்லை அடுத்த வள்ளிபுரத்தை அடுத்த வள்ளியப்பம்பட்டியில் மரவள்ளிகிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மரவள்ளி கிழக்கு விவசாயிகள் காந்திமதி, மோகன்ராஜ் மலர்கொடி, சீனிவாசன் ஆகியோர் கூறுகையில், ‘மரவள்ளி கிழங்கு பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் இதற்கு முன் அதிகம் இருந்தது.
இதை கட்டுபடுத்த வெளிநாடுகளிலிருந்து நுண்ணுயிர் ஒட்டுண்ணிகளை கொண்டு வந்து, மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு கொடுத்து வந்தது. தற்போது அது நிறுத்தப்பட்டுவிட்டது.இந்த ஆண்டு புதிதாக கள்ளிபூச்சி, செம்பேன் ஆகிய இரு வைரஸ்கள் மரவள்ளிக்கிழங்கு பயிரைத் தாக்கி விவசாயிகளை பாதிப்படைய செய்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.