டோக்கியோ: ஆடவர் ஒற்றையர் வில்வித்தை போட்டியில் அதானு தாஸ் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி, பதக்க வாய்ப்பை அதிகரித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிக்கு துவங்குவதற்கு முன்பு, இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு அதிகமுள்ள போட்டியாக வில்வித்தை போட்டி இருந்தது. ஆனால் ஒற்றையர், இரட்டையர், குழு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் முதல் சுற்றில் வெற்றி, அடுத்த சுற்றில் தோல்வி என பதக்க வாய்ப்புகளை இழந்தனர். அதே நேரத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தீபிகா குமாரி முதல் 2 சுற்றுகளில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இன்று நடைபெறும் அந்தப்போட்டியில் ரஷ்யன் ஒலிம்பிக் கமிட்டி வீராங்கனை கெசெனியா பெரோகோவை எதிர்கொள்கிறார். இந்நிலையில் மற்றொரு இந்திய வீரரும், தீபிகா குமாரியின் கணவருமான அதானு தாஸ் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் களமிறங்கினார். அவர் நேற்று காலை, முதல் சுற்றில் சீன தைபே வீரர் யூ செங் டெங்கை 6-4 என புள்ளி கணக்கி வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். தொடர்ந்து மதியம் நடந்த 2வது சுற்றில் தென் கொரிய வீரர் ஜின்யைக் ஓவை 6-5 என்ற புள்ளி கணக்கில்போராடி வென்றார்.
வலுவான தென் கொரிய வீரரரை வென்றதின் மூலம் பதக்க வாய்ப்பை அதானு அதிகரித்துள்ளார். காரணம் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் இரட்டையர், குழு ஆட்டங்களில் பெரும்பாலும் கொரிய வீரர், வீராங்கனைகளிடம்தான் தோற்று தான் வெளியேறினர். இந்நிலையில் கொரிய வீரரை வீழ்த்திய அதானு. நாளை நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பான் வீரர் தாகஹரு புருகாவாவை எதிர்கொள்கிறார்.