பிளஸ் 2 கூடுதல் மதிப்பெண் தேர்வு முடிவு வரும் வரை கல்லூரிகளில் சேர்க்கைக்கு தடைகோரிய மனு டிஸ்மிஸ்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 10 மற்றும் 11ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. கூடுதல் மதிப்பெண்கள் பெற தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கூடுதல் மதிப்பெண்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை மாணவர் சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.   இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், யூகத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை தொடர மனுதாரருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், பாதிக்கப்படும் மாணவர்கள் நீதிமன்றத்தை அணுக எந்த தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: