சென்னை: ‘சாலைகளை ஆக்கிரமித்து கோயில்கள் கட்டுங்கள் என்று எந்த மதக்கடவுளும் கேட்பதில்லை’ என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை ஓட்டேரி பகுதியில் நடைப்பாதைகள் மற்றும் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கோயில் மற்றும் கடைகளை அகற்ற கோரி தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி, பாதசாரிகள் நடக்க முடியாத அளவிற்கு நடைப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கோயில்களும் அதன் அருகில் அனுமதி பெறாத கடைகளும் அதிகரித்துள்ளதால் ஓட்டேரி செல்லப்பா சாலையில் நடக்க முடியாத நிலை ஏற்படுள்ளது என்று கூறி ஆக்கிரமிப்பு தொடர்பான புகைப்படங்களை தாக்கல் செய்தார்.