பயிர் காப்பீட்டு கட்டண மானியத்தில் ஒன்றிய அரசின் பங்கினை 49 விழுக்காடாக மாற்ற வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: பயிர்க் காப்பீட்டுக் கட்டணத்தில், ஒன்றிய அரசின் பங்களிப்பினை முன்பிருந்தபடி 49 விழுக்காடு மாற்றியமைக்க வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு எழுதியுள்ள கடிதம்: வேளாண் துறையில் விவசாயிகளின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பளவினை அதிகரித்தல், ஒரு முறைக்கு மேல் சாகுபடி செய்யும் பரப்பினை இரட்டிப்பாக்குதல் மற்றும் உணவு தானியங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல் ஆகிய மூன்று தொலைநோக்குப் பார்வையுடன் வேளாண்மைக்கென  தனி வரவு, செலவுத் திட்ட அறிக்கையை நடப்பாண்டு முதல் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

மேலும், விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய திட்டங்களில் ஒன்றான பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை தமிழ்நாடு வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய முயற்சிகளினால், காப்பீடு செய்யப்பட்ட பரப்பளவும், பதிவு செய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், காப்பீட்டுக் கட்டண மானியத்தில் ஒன்றிய அரசின் பங்கினை 49 விழுக்காட்டிலிருந்து, பாசனப் பகுதிகளுக்கு 25 விழுக்காடாகவும், மானாவாரி பகுதிகளுக்கு 30 விழுக்காடாகவும் குறைத்து நிர்ணயித்திருப்பதால், 2016-2017 ல் ரூ.566 கோடியாக இருந்த மாநில அரசின் பங்கு, 2020-2021ல் ரூ.1,918 கோடியாக, அதாவது 239 விழுக்காடு அளவிற்கு அதிகரித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று உள்ள இந்தக் காலக்கட்டத்தில் மாநில அரசின் நிதிச் சுமை அதிகரித்து வரும் நிலையில், இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவது தமிழ்நாடு அரசுக்கு சவாலாகவும், கடினமாகவும் உள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை, இத்திட்டத்தின் நோக்கத்தையே முடக்கியுள்ளது. எனவே, பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசின் பங்கீட்டினைக் குறைக்கும் வகையில், உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும் முறையை நீக்கி, மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, காப்பீட்டுக் கட்டணத்தில் ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் விவசாயிகளின் பங்கினை முறையே 49:49:2 என்ற விகிதத்தில் உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார். 2020-2021ல் ரூ.1,918 கோடியாக, அதாவது 239 விழுக்காடு அளவிற்கு அதிகரித்துள்ளது.

Related Stories: