புதிய கல்வி கொள்கையால் நாட்டின் தலைவிதி மாறும்: பிரதமர் மோடி நம்பிக்கை

புதுடெல்லி: ‘நமது நாட்டின் தலைவிதியை புதிய கல்விக் கொள்கை மாற்றி அமைக்கும்,’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான புதிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு கடந்தாண்டு கொண்டு வந்தது. இதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி மூலமாக கலந்துரையாடினார். பின்னர், உயர் கல்வியை சர்வதேச மயமாக்குவதற்கான, ‘கல்வி கடன் வங்கி’யை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு ஏராளமானோர்  கடுமையாக பணியாற்றி உள்ளனர். மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றப்படிதான், புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது. இது மிகப்பெரிய தொலைநோக்கு திட்டம் மட்டுமின்றி, நாட்டையும் அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும்.

நமது இளைஞர்கள் மாற்றத்திற்காக முழு அளவில் தயாராக உள்ளனர். கல்வியை பொறுத்தே நமது எதிர்காலம் அமையும். நமது நாட்டின் தலைவிதியை மாற்றும் கொள்கையாக இது அமையும். நமது நாட்டின் விடுதலைக்கு முன்பாக,  சிறந்த கல்வியை பெறுவதற்காக வெளிநாடுகள்  சென்றோம். தற்போது, வெளிநாட்டினர் நமது நாட்டிற்கு வந்து படிக்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார். மோடிக்கு 7 கோடி பாலோயர்ஸ்: சமூக வலைதளங்களை பிரதமர் மோடி அதிகம் பயன்படுத்துகிறார். இந்நிலையில், டிவிட்டர் பக்கத்தில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியுள்ளது. உலகளவிலான இந்த பட்டியலில் அவர் 11வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா  12.98 கோடி பின் தொடர்பவர்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். 

Related Stories: