மாணவர்களுக்கு வருமானச் சான்றிதழ், சாதிசான்றிதழ் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் : அமைச்சர் இராமச்சந்திரன் உத்தரவு!!

சென்னை : பள்ளி மற்றும் கல்லூரி  மாணவ / மாணவியர்களுக்கு வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிசான்றிதழ் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுடமிருந்து, வருமான சான்றிதழ் / சாதி சான்றிதழ் கோரி பெறப்படும் மனுக்கள் மீது எவ்வித கால தாமதமின்றி உடனடியாக பரிசீலித்து, அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க வட்டாட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    

தற்போது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு இருப்பதால் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து இ-சேவை  மையங்களிலும் மாணவர்கள் சான்றுகளை  கூட்ட நெரிசல் இன்றி பெற்று செல்ல ஏதுவாக குறிப்பிட்ட நாட்களை அதற்கென ஒதுக்கி, எவ்வித இடையூறு இன்றி சான்றிதழ்கள் வழங்கபட வேண்டும்.

சான்றுகளை வழங்குவதில் தேவையற்ற கால தாமதத்தினை தவிர்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தவறாது சான்றுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், தேவையின்றி மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது எனவும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: