சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று 29.07.2021 செங்கல்பட்டு மாவட்டம், திருவிடந்தை அருள்மிகு நித்திய கல்யாண பெருமாள் திருக்கோயில் மற்றும் திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, மாண்புமிகு மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வின்போது அமைச்சர் தெரிவித்தாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க 1000 ஆண்டுகள் கடந்த திருக்கோயில்களை நேரிடையாக சென்று பார்வையிட்டு அந்தந்த கோயிலுக்கு தேவையான அடிப்படை தேவைகளை குறிப்பாக தெப்பக்குளங்கள், திருத்தேர்கள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, திருக்கோயில் அலுவலகங்கள், திருக்கோயில் சார்ந்த திருமண மண்டபங்கள் போன்றவற்றை சரிபார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள்.
அதன் அடிப்படையில் முழுமையான திருக்கோயிலை புனரமைக்க வேண்டிய நடவடிக்கைகளை பார்வையிட்டோம். ஏற்கனவே அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் 2004 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு பாதியிலேயே தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற படாமல் உள்ள மண்டபத்தை பார்வையிட்டு அதை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கும், பக்தர்கள் பயன்பாட்டிற்கும் கொண்டு வருவதற்காக 60 லட்சம் ரூபாய் செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உடனடியாக அந்த பணிகளை துவங்க இருக்கிறோம்,என்றார்.முன்னதாக திருவிடந்தை அருள்மிகு நித்திய கல்யாண பெருமாள் திருக்கோயிலில் புதிதாக 1 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படவுள்ள திருமண மண்டபத்தின் இடத்தை ஆய்வு செய்து திருக்கோயிலில் நந்தவனம், பூங்கா அமைக்க மதிப்பீடு தயார் செய்யவும், திருக்கோயில் அலுவலகம், அன்னதானக் கூடம் ஆகியவற்றை முறையாக பராமரிக்கவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், மாமல்லபுரத்தில் இருந்து திருவிடந்தை வரையுள்ள ஏதேனும் ஒரு பகுதியில் அரசு கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.