மதுரை : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில்,
17வது மக்களவையில் அதிகமாக எதிரொலித்துக் கொண்டிருப்பது மூன்று முழக்கங்கள் “We want Justice…. We want Justice”
“நஹி சலேகா…. நஹி சலேகா… டானா சாஹி நஹி சலேகா” “வேண்டும்… வேண்டும்…. நீதி வேண்டும்” CAA துவங்கி பெகாசஸ் வரை மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஓங்கி ஒலிக்கப்படும் முழக்கங்கள் இவை மூன்றும்.வழக்கமாக மக்களவையின் மையப்பகுதியில் எதிர்கட்சி உறுப்பினர்களால் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் முழக்கம் எழுப்பப்படும். தமிழக உறுப்பினர்கள் தமிழில் முழக்கங்களை எழுப்புவதுண்டு.மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து ஏழு நாட்களாக பெகாசஸ் - வேவு பார்க்கப்பட்ட பிரச்சனை தொடர்பாக 150 மக்களவை உறுப்பினர்கள் போராடி வருகிறோம். வழக்கம் போல் அவையின் மையப்பகுதியில் இடைவிடாது முழக்கம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இம்முறை சற்றே ஆச்சரியமான விசயம் என்னவென்றால், வழக்கமாக ஒருவர் முதலில் முழக்கத்தை முன்னெடுப்பார், மற்ற அனைவரும் அவரை குரல் வழி பின் தொடர்வோம். இப்பொழுது இத்தமிழ் முழக்கத்தை முன்னெடுப்பவர் பஞ்சாப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்பீர் சிங்.“வேண்டும் .. வேண்டும் “ என்று அவர் முழங்க, “ நீதி வேண்டும்” என்று நாங்கள் முழங்குகிறோம்.சர்தார்ஜியின் தமிழ் கர்ஜனை மக்களவையின் மையப்பகுதியை உலுக்கிக் கொண்டிருக்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.