ஊருக்குள் புகுந்த யானைகளை வனத்திற்குள் விரட்ட முயற்சி

கோவை :  கோவை போளூவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானை நடமாட்டம் உள்ளது.  குறிப்பாக, நரசிபுரம், வெள்ளருக்கம்பாளையம், இச்சிக்குழி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் வனத்தில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள், நரசிபுரம் வேட்டைகாரன் புதூர் பகுதியில் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். யானைகள் நரசிபுரம், கருப்பராயன் கோயில் வழியாக நெருஞ்சிகாடு கல்குழி பகுதிக்கு நேற்று காலை சென்றது. இதையடுத்து, போளூவாம்பட்டி ரேஞ்சர், முள்ளாங்காடு, நரசிபுரம், தும்பிலிபாளையம் குழுவினருடன் யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், யானைகள் இரண்டும் கல்குழியை விட்டு வெளியேறாமல் அங்கேயே இருந்தது. அங்கிருந்த தண்ணீரில் குளித்தது. இதையடுத்து, வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்கும் வகையில் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக யானைகள் வனத்திற்குள் செல்லாமல் கல்குழியில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: