ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மூலன் 1.05 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் : ஒன்றிய அரசு விளக்கம்!!

சென்னை : ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையேயான எரிவாயு குழாய் திட்டத்துக்கு தடை இன்மைச் சான்று தேவை இல்லை என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ, எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விகள்:

1. ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை, அண்மையில் பிரதமர் தொடங்கி வைத்த இயற்கை எரிவாயு குழாய் திட்டம் குறித்த விவரங்கள்;

2. அந்தத் திட்டச் செலவுத் தொகை எவ்வளவு? 2021-22 ஆம் நிதி ஆண்டில், அதற்காக எவ்வளவு தொகை ஒதுக்கி இருக்கின்றீர்கள்?

3. இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு, சுற்றுச்சூழல் துறையில் அனுமதி பெறப்பட்டதா?

4. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்;

5. இந்தத் திட்டத்தால் பயன் பெறும் பகுதிகள் யாவை? அடுத்த மூன்று ஆண்டுகளில், எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகும்?.

ஆகிய கேள்விகளை வைகோ எழுப்பியிருந்தார்.

இக்கேள்விகளுக்கு மத்திய எண்ணெய், இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் டெலி அளித்த விளக்கம்:

இந்தியன் ஆயில் நிறுவனத்தின், எண்ணூர் - திருவள்ளூர் - பெங்களூரு - புதுச்சேரி - நாகப்பட்டினம் - மதுரை - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தின் (ETBNMTL) ஒரு பகுதியான, ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே, 142 கிலோ மீட்டர் நீளம், 4 MMSCMD திறன் கொண்ட, இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை, 17.02.2021 அன்று, பிரதமர் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையேயான எரிவாயு குழாய் திட்டத்துக்கான மொத்தச் செலவு மதிப்பு 700 கோடி ரூபாய் ஆகும். 2021-22 ஆம் நிதி ஆண்டுக்கு, 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் இந்தியன் ஆயில் நிறுவனம், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக, சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாறுபாடுகள் துறை அமைச்சகத்திடம் (Ministry of Environment, Forest and Climate Change - MoEF) திட்ட வரைவு வழங்கி இருக்கின்றார்கள். அதற்கான சட்டப்பிரிவுகளை, அமைச்சகம் ஆய்வு செய்தது; இந்தத் திட்டத்துக்கு தடை இன்மைச் சான்று தேவை இல்லை எனத் தீர்மானித்தது.

ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு திட்டத்தால், அந்த இரு மாவட்டங்களும் பயன்பெறும்; 30 பேருக்கு நேரடியாகவும், 75 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்; தவிர, அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்தத் திட்டத்தால் பயன்பெறும் தொழிற்கூடங்கள், எரிவாயு வழங்குதல் பணிகளில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Related Stories: