சென்னை டூ அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கான விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு ஆயிரத்தில் இருந்து லட்சக்கணக்கில் அதிகரிப்பு!!:

டெல்லி : சர்வதேச அளவில் கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி பல்வேறு நாடுகள் விமான பயணத்திற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி வரும் நிலையில், டிக்கெட் கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் விமான பயணம் செய்ய பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அனுமதி அளித்து வருகின்றன.இதனால் தொழில் துறையினரும் மாணவர்களும் அதிகளவில் விமான பயணம் மேற்கொள்ள தொடங்கி இருக்கும் நிலையில், விமான போக்குவரத்து நிறுவனங்கள் பயண கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியுள்ளது.

குறிப்பாக சென்னையில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான பயண கட்டணம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து லண்டன் செல்வதற்கான ஒரு வழி விமான கட்டணம் ரூ.27,000ல் இருந்து ரூ.1.16 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் செல்வதற்கான கட்டணம் ரூ. 93,400ல் இருந்து ரூ. 1.86 லட்சமாக அதிகரித்துள்ளது. ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகருக்கு பயணிக்க ரூ.34,000ல் இருந்து ரூ.1.80 லட்சமாக உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு செல்ல முன்னர் ரூ.1.19 லட்சத்தில் இருந்த விமான கட்டணம், தற்போது ரூ.1.61 லட்சமாகி உள்ளது.அதே போல அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு பயணிக்க ஒருவர் ரூ.1.3 லட்சம் செலுத்த வேண்டும். இது பழைய கட்டணத்தை விட ரூ.30,000 அதிகமாகும். இது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பயணம் செய்வோருக்கான கட்டணம் ஆகும்.பயண நாள் நெருங்க நெருங்க விமான கட்டணம் மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: