சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடம் வாங்கப்பட்ட சோழர் கால சிலைகள் உட்பட 14 கலை பொக்கிஷங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் ஆஸி.

டெல்லி: சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடம் வாங்கப்பட்ட சோழர்கால சிலைகள் உட்பட 14 சிலை பொக்கிஷங்களை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் சோழர் காலத்து வெண்கல சிலைகள் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்ட கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சுபாஷ் கபூர் மற்றும் வில்லியம் மோல்ப் ஆகியோரிடம் இருந்து முறைகேடாக வாங்கப்பட்ட சோழர்கால சிலைகள் உட்பட 14 கலை பொக்கிஷங்களை அருங்காட்சியகத்தில் இருந்து அகற்ற ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது.

சுபாஷ் கபூரின் கலைக்கூடத்தில் இருந்து பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட சிலைகள் சட்டவிரோதமானவை என்பதை கண்டுபிடித்த அந்த நாட்டு தேசிய அருங்காட்சியகம் அவற்றை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது. சிலைகளின் ஆதாரம் மற்றும் முறைப்படி வாங்கப்பட்டதா என்பதை ஆராய்ந்த பிறகு முடிவு எடுக்கப்பட்டதாக அருகட்சியாக இயக்குநர் Nick Mitzevich கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான கூட்டு முயற்சி காரணமாக கலாச்சார ரீதியான பொருட்களை திருப்பி கொடுப்பதில் பெருமைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அரசு எடுத்துள்ள முடிவுக்கு அந்த நாட்டிற்கான இந்திய தூதர் மான்பிரீத் வோரா வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் நல்லெண்ண முயற்சிக்கு இந்தியா கடமைப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சிலைதிருட்டு வழக்கில் இன்டர்போல் உதவியுடன் 2011ல் சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: