பால்பண்ணை நிர்வாகத்தை மேம்படுத்திட ஒன்றிய அரசிடம் உள்ள திட்டங்கள் என்ன?...மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி

சென்னை: திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மக்களவையில், பால்பண்ணை நிர்வாகத்தை மேம்படுத்தவும், கால்நடைகளை குறிப்பிட்டு கண்டறியும் வகையிலும், ஒன்றிய அரசிடம், ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா, அதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா என்று கேள்வி எழுப்பினார். ஒன்றிய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா பதில்: செப்டம்பர் 2020ல், ஈ-கோபாலா என்ற செயலி பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் மூலம் கால்நடைப் பெருக்கத்திற்கான தரமான வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், கால்நடைகளை நோயில் இருந்து பாதுகாப்பதற்காகவும், அவைகளுக்குத் தரமான உணவுகள் கிடைப்பதற்காகவும், உரிய காலத்தில் தடுப்பூசி அளிக்கவும், இந்த செயலி பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், ஈ-கோபாலா செயலியின் உதவியால், கால்நடை பராமரிப்புத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும், பல்வேறு திட்டங்களையும், நடவடிக்கைகளையும், விவசாயிகள் அறிந்து கொள்ள முடியும். தேசிய கால்நடைகள் நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ், இந்தியாவில் 53 கோடிக்கும் அதிகமான கால்நடை இனம் கண்டறியப்பட்டுள்ளது. 16 கோடிக்கும் அதிகமான எருமை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது  என்று அவர் கூறினார்.

Related Stories: