கிராமங்களில் உள்ள ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சென்றடைய வழி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக் கோரி சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் என்ற அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பள்ளிகள் மூடப்பட்டதால் சத்துணவு இல்லாமல் மாணவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சத்துணவு திட்டம் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை பெற்றோர், பொருளாதார பாதிப்பு காரணமாக அவற்றை விற்று விடுகிறார்கள்.

அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறந்து, அவற்றின் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தார். இந்த யோசனை குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கூறினார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், கொரோனா தாக்கம் தணிந்துள்ளது. மூன்றாவது அலை தாக்கும் என்பதற்கு அறிவியல்பூர்வமாக எந்த கணிப்பும் இல்லை. எனவே, கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அறிவியல்பூர்வமாக ஆலோசனைகளை பெற்று ஆய்வு செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும். மாணவர்களுக்கு சத்துணவு சென்றடையச் செய்வதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: