சென்னை: தமிழகத்தில், விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் குழந்தை திருமணம், பெண்சிசு கொலை போன்ற சமூக அவலங்களை களைவதுடன், அதற்கான சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, சமூக சீர்திருத்தத்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில், சமூகநல துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மகளிர், குழந்தைகள், மூன்றாம் பாலினர், மூத்த குடிமக்களின் பாதுகாப்பு, உரிமை மற்றும் நலனை உறுதி செய்திட வேண்டும். பெண் கல்வி மற்றும் சமூகச் சீர்த்திருத்தங்களுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளில் குறிப்பாக, திருமண நிதியுதவி திட்டங்களில் தகுதிவாய்ந்த பயனாளிகள் எவரும் விடுபடாமல் உரிய காலத்தில் பயன்களை வழங்க வேண்டும். குழந்தை திருமணம், பெண்சிசு கொலை போன்ற சமூக அவலங்களை களைய உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கான சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் சத்துணவு திட்டம் மூலம் வழங்கப்படும் உணவு, உலர் உணவு பொருட்கள், சத்து மாவு, முட்டைகள் ஆகியவற்றை சுத்தமாகவும், உயர் தரமானதாகவும் வழங்க வேண்டும். ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் வரும் உயரக்குறைவு, மிகுந்த மெலிவுத்தன்மை, ரத்தசோகை ஆகிய குறைபாடுகள் அதிகம் காணப்படும் மாவட்டங்களைக் கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்தி, தமிழகத்தை ஊட்டச்சத்து குறைபாடில்லா மாநிலமாக உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.கொரோனா நோய்த்தொற்று காரணமாக தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளை கண்டறிந்து தற்போது அறிவிக்கப்பட்ட வைப்புத்தொகை திட்டத்தில் பயன்பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநங்கையர் கல்வியறிவு பெற்று, சுயமாக இயங்கவும், பாதுகாப்புடன் வாழவும் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் திருநங்கையர் நலவாரியத்தின் மூலம் உருவாக்கிட வேண்டும். அரசு உதவியுடன் செயல்படும் 129 முதியோர்களுக்கான இல்லங்களை அவ்வப்போது உயர் அலுவலர்கள் பார்வையிட்டு, அந்த இல்லங்கள் அனைத்து வசதிகளுடன் இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும். அரசு உதவி பெறாமல் இயங்கும் அனைத்து முதியோர் இல்லங்களும் பதிவுபெற்று அங்கீகாரத்துடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.கொரோனா நோய்த்தொற்று காரணமாக தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளை கண்டறிந்து தற்போது அறிவிக்கப்பட்ட வைப்புத்தொகை திட்டத்தில் பயன்பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.