மறைமலைநகரில் பரபரப்பு பயங்கர ஆயுதங்களுடன் திரிந்த 4 பேர் கைது: போலீசார் விசாரணை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீசார், நேற்று இரவு சிங்கபெருமாள் கோயில் அருகே, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நான்கு வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை நெருங்கும்போது, இரண்டு பைக்குகளில் மின்னல் வேகத்தில் தப்பிசென்றனர். அவர்களை பின்தொடர்ந்து துரத்தி பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனையடுத்து, அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், இரண்டு கையெறி குண்டுகள், 3 பட்டாகத்திகள் சிக்கின.

பின்னர்,அவர்களை மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், திருக்கச்சூர் பகுதியை சேர்ந்த கிஷோர்( 20) சிவக்குமார் (19)அழகேசன் (26) குப்புசாமி (24) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 கையெறி குண்டுகள், 3 பட்டாகத்திகள், இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார், இரவு நேரத்தில் சம்மந்தமில்லாமல் எதற்காக கையெறிகுண்டு மற்றும்  பட்டாக்கத்திகளுடன் சுற்றித்திரிந்தது எதற்காக? யாரையும் கொலைசெய்யும் திட்டமா? வெடிகுண்டு வீசி யாரையாவது மிரட்டும் திட்டமா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்புதான் அதிமுக பிரமுகரும் தொழில் அதிபரான திருமாறன் என்பவர் குண்டு வீசி கொலை செய்யப்பட்டார். அதேபோல் அரசியல் பிரமுகர்களை கொலை செய்ய திட்டமா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: