திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் தாலுகா நல்லாத்தூர் ஊராட்சியில், கடந்த 2016ம் ஆண்டு அங்குள்ள பொதுப்பணி துறைக்கு சொந்தமான கால்வாயை சுத்தம் செய்து அகலப்படுத்துவதற்காக கால்வாய் கரையோரத்தில் சுமார் 50 ஆண்டுகளாக குடியிருந்த குடும்பங்களை காலி செய்து வீடுகளை இடித்து அகற்றினர். இந்நிலையில், ஆதிதிராவிடர் அல்லாத இதர சமூகத்தினருக்கு பொம்மராஜபுரம் என்ற பகுதியில் மாற்று இடம் வழங்கப்பட்டது. ஆனால், வீடுகளை இழந்த சுமார் 20க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு மட்டும் இதுவரை மாற்று இடம் வழங்கவில்லை. இதுவரை வீட்டுமனை வழங்க அதிகாரிகள் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததை கண்டித்து நேற்று வீடுகள் கிடைக்காத ஆதிதிராவிடர் மக்கள் மற்றும் மக்கள் உரிமை நீதி பொது நல சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகம் முன்பு உடனடியாக வீட்டு மனைகள் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், தாசில்தார் சிவசங்கரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, உடனடியாக வீட்டுமனை ஒதுக்கி தருவதாக தாசில்தார் உறுதியளித்தார்.