×

பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேருவது அவசியம்: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேருவது அவசியம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலை குறிவைத்து, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முதல் முறையாக மம்தா டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுவதால் அவரது பயணம் தேசிய அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. பயணத்தின் முதல் நாளான நேற்று, காங்கிரஸ் மூத்த தலைவர்களான கமல்நாத், ஆனந்த் சர்மா, அபிஷேக் சிங்வி ஆகியோரை மம்தா தனித்தனியாக சந்தித்து பேசினார்.

அப்போது, காங்கிரஸ் இல்லாமல் பாஜவுக்கு எதிராக நாடு தழுவிய கூட்டணி அமைய வாய்ப்பில்லை என கமல்நாத், மம்தாவிடம் கூறினார். இதையடுத்து, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மம்தா சந்தித்தார். அப்போது, மேற்கு வங்கத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்ட அவர், பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, இன்று மாலை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவை மம்தா சந்தித்து பேசினார். மேலும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், திமுக எம்பிக்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் அவர் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

சோனியாவைவுடனான சந்திப்புக்கு பின் மம்தா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; டெல்லி: பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேருவது அவசியம். தனியாக இருந்தால் தான் ஒன்றுமில்லை என்று கூறிய மம்தா அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட அழைப்பு விடுத்தார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் அணிக்கு யார் தலைமை வகித்தாலும் எனக்கு ஆட்சேபம் இல்லை. எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு தலைவராக யாரையும் திணிக்க முடியாது. நான் தலைவர் அல்ல; சாலையில் இருக்கும் சாதாரண ஊழியர் என்றும் கருத்து தெரிவித்தார்.

தேனீர் விருந்துக்காக தம்மை சோனியா காந்தி அழைத்திருந்தார்; ராகுலும் அப்போது அங்கு இருந்தார். சோனியா காந்தியுடன் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்ததாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; பெகாசஸ் செல்போன் ஒட்டுக்கேட்பு, கொரோனா நிலவரம் எதிர்க்கட்சி ஒற்றுமை குறித்து விவாதித்தோம். சந்திப்பு நன்றாக இருந்ததாகவும் விரைவில் ஆக்கப்பூர்வமான விளைவு தெரியும். பெகாசஸ் செல்போன் ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க ஒன்றிய அரசு ஏன் மறுக்கிறது? விவாதங்களை நாடாளுமன்றத்தில் நடத்தாவிட்டால் வேறு எங்கு நடத்துவது? பெகாசஸ் விவகாரம் குறித்து டீ கடைகளில் விவாதிக்க முடியாதது; நாடாளுமன்றத்தில் தான் விவாதிக்க வேண்டும் எனவும் கூறினார்.


Tags : Mamata Banerjee ,BJP , Mamata Banerjee urges all opposition parties to unite to defeat BJP
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...