கடப்பா: ஆந்திராவில் உள்ள கல்லூரியில் பணியாற்றும் இளம்பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல் செய்த கல்லூரி முதல்வரை பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரி முதல்வர் கிருஷ்ணா ரெட்டி என்பவர், கல்லூரியில் பணியாற்றி வரும் இளம்பெண் ஊழியரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துள்ளார். அதையடுத்து பல்கலைக்கழக துணை வேந்தர் சூர்யா கலாவதி உத்தரவின் பேரில், பயோடெக்னாலஜி பேராசிரியரான சந்திரமதி சங்கர், இவ்விவகாரம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து பேராசிரியர் பத்மா தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு மற்றும் கல்வியாளர்களான ஏ.ஜி.ராமு, நசீர் அகமது ஆகியோர், பாலியல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில், இளம்பெண் ஊழியருக்கு கிருஷ்ணா ரெட்டி பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது உறுதி செய்யப்பட்டதால், அவர் கல்லூரியின் முதல்வர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பொறுப்பு முதல்வராக பேராசிரியர் சந்திரமதியை, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இவ்விவகாரம் தொடர்பாக கடப்பா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.