சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க புதிய குழு அமைத்து தமிழக அரசு ஆணை

சென்னை : குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை, பரிந்துரைகளை வகுப்பதற்கான குழுவினை முன்னாள் தொழில்துறைச் செயலாளர் முனைவர் ந.சுந்தரத்தேவன் தலைமையில் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை இன்று (28.07.2021) அமைத்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கினை வகிப்பதுடன் வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்கப் பங்கினை வழங்கி வருகின்றன.

இந்நிறுவனங்கள் கோவிட் பெருந்தொற்று மற்றும் பல்வேறு பொருளாதாரக் காரணங்களால் பாதிக்கப்பட்டு மிகவும் கடினமான சூழலைச் சந்தித்து வருகின்றன. சட்டமன்றப் பேரவையில் 21.06.2021 அன்று ஆளுநர் அவர்கள் ஆற்றிய உரையில் “நலிவுற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்காகத் தொழிலதிபர்கள், வங்கியாளர்கள், நிதித்துறை வல்லுநர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய நிபுணர்குழு அமைக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது.

மேற்கண்ட அறிவிப்பிற்கிணங்க, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கான குழுவினை முனைவர் ந.சுந்தரத்தேவன், இ.ஆ.ப., (ஒய்வு)., முன்னாள் தொழில்துறைச் செயலாளர் அவர்கள் தலைமையில் பின்வரும் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை 28.07.2021 அன்று அமைத்துத் தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.

இதர உறுப்பினர்கள் கீழ்வருமாறு:-

i).  பேராசிரியர் M.விஜயபாஸ்கர், பகுதி நேர உறுப்பினர் மாநில வளர்ச்சி கொள்கைக்குழு (SDPC) மற்றும் பேராசிரியர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS).

ii).  திருமதி பிந்து ஆனந்த், இந்திய ரிசர்வ் வங்கியின் Financial Inclusion, SME Finance and Securitization குழுக்களின் முன்னாள் உறுப்பினர்.

iii) திரு. பாலசுப்ரமணியம், முன்னாள் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், இந்தியச் சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI)

iv) திருமதி ஹேமலதா அண்ணாமலை, முன்னாள் தலைமை நிருவாக அதிகாரி, ஆம்பியர் வெகிகல்ஸ் மற்றும் முன்னாள் தலைவர், TiE Women.

v)  திரு. இஸ்ரார் அகமத், மண்டலத் தலைவர், இந்திய ஏற்றுமதி கழகங்கள் கூட்டமைப்பு (FIEO).

vi)  திரு. அன்புராஜன், தலைவர், தமிழ்நாடு சிறு மற்றும் சிறிய தொழில்கள்  சங்கம் (TANSTIA)

vii) திரு. ஆனந்த், முன்னாள் பங்குதாரர், எர்னஸ்ட் & யங் மற்றும் பட்டயக் கணக்காளர், இந்திய ரிசர்வ் வங்கியின் Asset Reconstruction Companies     குழுவின் முன்னாள் உறுப்பினர்.

இக்குழுவில் கீழ்க்காணும் அலுவலர்கள் அலுவல்சாரா உறுப்பினர்களாக இருப்பர்

viii) செயலாளர், நிதித்துறை.

ix)  செயலாளர், தொழில்துறை,

x)  செயலாளர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

xi) தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் (உறுப்பினர் - செயலர்)

xii)  தலைவர், மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு

மேற்காண் குழு தமிழகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றிலிருந்து நிறுவனங்களை மீட்டெடுப்பதற்குத் தேவையான உடனடி, குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான பரிந்துரைகளை வழங்கும். இக்குழு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான கடன் வசதி பெறவும் மற்றும் ஏற்றுமதியினை மேம்படுத்தவும் தேவையான ஆலோசனை வழங்கும். மேலும், இக்குழு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு, வணிகம் புரிவதை எளிமையாக்குதல் மற்றும் மனித ஆற்றல் தொடர்பாக ஆராயும். மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உயர்த்த ஆலோசனை வழங்கவும் இக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 இக்குழு 3 மாதங்களுக்குள் அதன் அறிக்கையை அரசுக்கு அளிக்கும்.

இவ்வாறு, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories: